விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுமா ? சத்யபிரத சாஹு விளக்கம்..!

 
1

சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “விருதுநகரில் விஜய பிரபாகரன் தோற்கவில்லை. தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதுதான் உண்மை. வாக்கு எண்ணிக்கையின்போது வாக்கு எண்ணும் மையத்தில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும், ஊடகங்களில் சொல்லப்பட்ட அறிவிப்புகளுக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் இருந்தது. வாக்கு எண்ணும் மையத்தில் பல முறைகேடுகள் நடந்ததாக அங்கிருக்கும் அதிகாரிகளே சொல்கிறார்கள். அங்கு மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இரண்டு மணிநேரம் வாக்கு எண்ணிக்கை” என்று குற்றச்சாட்டுகளை கூறினார்.

பிரேமலதாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, “தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை தான் நாட முடியும். விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். எனினும், விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படுவது தொடர்பாக தேமுதிகவின் எந்தப் புகாரும் இதுவரை கிடைக்கவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் முதல் முறையாக வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளின்படி, விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விஜயபிரபாகரனை தோற்கடித்தார்.