பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைகிறதா தமிழகம்? மாநிலத் தலைமைச் செயலருக்கு மத்திய அரசு கடிதம்..!
'பிரைம் மினிஸ்டர்ஸ் ஸ்கூல்ஸ் ஆப் ரைசிங் இந்தியா' எனப்படும், பி.எம்.ஸ்ரீ திட்டத்தை, மத்திய அரசு கடந்த 2022ல் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில், 14,500 பள்ளிகளை இணைத்து, அவற்றை பிரதமரின் முன்மாதிரி பள்ளிகள் என்ற பெயரில் மேம்படுத்தி, மற்ற பள்ளிகளுக்கு வழிகாட்டியாக்க வேண்டும் என்பதே, மத்திய கல்வித் துறையின் நோக்கம்.
இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக, திமுக அரசு முதலில் தெரிவித்தது. பின்னர், அதில் இருந்து பின்வாங்கியது. அதேபோல், மேற்கு வங்கமும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளன.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணையவில்லை என்பதற்காக, மத்திய அரசு, மாநில அரசுக்கு போதிய நிதியை ஒதுக்கவில்லை என, திமுக அரசு குற்றம்சாட்டி வந்தது.இந்நிலையில், பி.எம்.ஸ்ரீ திட்டத்தில், தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் இணைய வலியுறுத்தி, மாநிலத்தின் தலைமைச் செயலர்களுக்கு, மத்திய கல்வித்துறை கடிதம் அனுப்பி உள்ளது.

