எத்தனால் கலந்த பெட்ரோல் எறும்புகளை ஈர்க்குமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த BPCL!

 
Q

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்களால், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இதன்மூலம் உத்வேகம் அடைந்த வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய வாகனங்களின் உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் 85 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருள் அறிமுகம் செய்யப்பட்டது.

இது, வழக்கமான பெட்ரோலை காட்டிலும் லிட்டருக்கு 20 ரூபாய் விலை குறைவு. இதனால் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் எத்தனால் கலந்த எரிபொருளுக்கு ஆதரவு அதிகரிக்கிறது.

இந்நிலையில் எத்தனால் கலந்த எரிபொருள் வாகனங்களில், எறும்புகள் மொய்ப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த வீடியோக்கள் போலியானவை என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்; பெட்ரோலுடன் கலப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரத்திலான எத்தனால், நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் செயல்முறைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது. இந்த செயல்முறைகள் சர்க்கரைச் சத்துக்களை முழுமையாக நீக்கிவிடுகின்றன. மேலும், இந்த எரிபொருள் எத்தனாலில் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்ட மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பெட்ரோலுடன் எத்தனாலைக் கலந்த பிறகும், பெட்ரோலின் ஹைட்ரோகார்பன் வாசனைதான் மிகத் தீவிரமாக இருக்கும். அதுமட்டுமின்றி, பெட்ரோலுடன் ஒப்பிடும்போது, எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலில் இருந்து மிகக் குறைந்த அளவிலேயே எரிபொருள் நீராவியாகிறது. இதன் காரணமாக, எறும்புகளையோ அல்லது பிற பூச்சிகளையோ வாகனத்தின் எரிபொருள் மூடிகளுக்கு அருகே ஈர்க்கக்கூடிய எந்தவொரு காரணியும் அந்த எரிபொருளில் இல்லை.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் இந்தத் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்றவை. எத்தனால் கலந்த எரிபொருள் எறும்புகளை ஈர்க்கும் என்பது பொய். அடிப்படை ஆதாரமற்றது; அத்தகைய படங்கள், பதிவுகள் போலியானவை.

இவ்வாறு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.