இப்படி கூட மரணம் வருமா ? பட்டாம்பூச்சியால் 14 வயது சிறுவன் பலி...!

 
1

பிரேசில் நாட்டில் டேவி நுனிஸ் மொரைரா என்ற 14 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவனுக்கு திடீரென காலில் அலர்ஜி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். அந்த சிறுவன் தன் தந்தையிடம் விளையாடும் போது காலில் அடிபட்டதில் காயம் ஏற்பட்டதாகவும் அதனால் அலர்ஜி ஏற்பட்டதாகவும் கூறியுள்ளான்.

ஆனால் சிறுவன் சொன்னது சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அதன் பிறகு நடத்திய விசாரணையில் தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறுவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் மருத்துவமனையில் அவனிடம் பெற்றோரும், மருத்துவர்களும்   நடந்த விவரங்களை கேட்டுள்ளனர். அப்போது சிறுவன் ஒரு பட்டாம்பூச்சியை எடுத்து அதனை தண்ணீரில் நன்றாக கலக்கி அதன் நீரை ஊசி மூலம் தன்னுடைய காலில் செலுத்தியுள்ளான்.

அதன் பிறகு தான் காலில் அலர்ஜி ஏற்பட்டு சிறுவனின் உடல்நிலை மோசமானதாக கூறியுள்ளான்.   சிறுவன் செலுத்திக்கொண்ட ஊசியையும் கண்டுபிடித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்குள் சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்ட நிலையில் அந்த பட்டாம்பூச்சியின் உடம்பில் உள்ள ஏதாவது கிருமிகள் தான் சிறுவனின் உடம்பில் சென்று மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள்  கூறியுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகு தான் மரணத்திற்கான உண்மை காரணம் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.