ஆடி 1-ல் தேங்காய் சுடுவது ஏன்? கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய திருவிழா!
ஆடி மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் ஆடி தேங்காய் சுடுதல் பண்டிகை.இந்த பண்டிகையானது தமிழ்நாட்டின் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகைக்கும் மகாபாரத போருக்கும் தொடர்புடையதாக கூறப்படுகிறது. தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் இடையே நடந்த மகாபாரத போரானது ஆடி மாதம் 1 ஆம் தேதி தொடங்கி, 18 நாட்கள் நடந்து, ஆடி 18 ஆம் நாளில் முடிவுக்கு வந்தது.
இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்கான மக்கள் தங்கள் மனதிற்கு பிடித்த கடவுளை வேண்டி, பூஜைகளை செய்தார்கள். அப்போது அந்த கடவுளுக்கு தேங்காயை சுட்டு பிரசாதமாக படைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கம் அப்படியே இன்னும் சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் ஆடி மாதத்தின் முதல் நாளில் தேங்காய் சுட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆடி தேங்காயை ஆடி 18 அன்றும் சிலர் சுடுவர்.
இந்த ஆடி தேங்காய் மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் சத்தானதும் கூட. இந்த ஆண்டு ஆடி தேங்காயை உங்கள் வீட்டில் செய்து கடவுளுக்கு படைத்து வழிபட நினைக்கிறீர்களா? ஆடி தேங்காயை எப்படி சுட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே ஆடி தேங்காயை எப்படி சுடுவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து ஆடி முதல் நாளில் செய்து தெய்வத்திற்கு படைத்து வழிபாடு செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய தேங்காய் - 1
* பாசிப்பருப்பு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சரிசி - 3/4 டேபிள் ஸ்பூன்
* அவல் - 3/4 டேபிள் ஸ்பூன்
* எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* நாட்டு வெல்லம் - 1/4 கப்
* நீளமான அழிஞ்சில் குச்சி/வாத நாராயணன் குச்சி
* முதலில் பெரிய தேங்காயை எடுத்து அதில் உள்ள நாரை முழுமையாக நீக்கிவிட வேண்டும். பின் அந்த தேங்காயை சொரசொரப்பான தரைப்பகுதியில் நன்கு தேய்த்து, மென்மையாக்க வேண்டும்.
* அதன் பின் தேங்காயில் உள்ள மூன்று கண்களில் ஒரு கண்ணில் துளையிட்டு, தேங்காயில் உள்ள நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் எள்ளு விதைகளை சேர்த்து லேசாக வறுத்து, அதை வறுத்த பாசிப்பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் அரிசி மற்றும் அவலை சேர்த்து வறுத்து, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பாசிப்பருப்பு, எள்ளு, அரிசி, அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை சேர்த்து கொரகொரவென்று அரைத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் நாட்டு வெல்லத்தை நன்கு தட்டிப் போட்டு கலந்து விட வேண்டும். * பின்பு தேங்காயை எடுத்து, அதில் மஞ்சளை நீரில் கரைத்து தடவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த தேங்காயின் துளையின் வழியாக அரைத்ததை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, அத்துடன் தேங்காய் நீரையும் ஊற்றி நிரப்ப வேண்டும்.
* பிறகு அழிஞ்சில் குச்சி அல்லது வாத நாராயணன் குச்சியை எடுத்து, அதன் முனைப்பகுதியை சீவி, அதிலும் மஞ்சளை தடவி, தேங்காயின் துளையினுள் நுழைத்து அடைக்க வேண்டும்.
* இறுதியாக வீட்டிற்கு வெளியே நெருப்பை மூட்டி, அதில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி நன்கு சுட வேண்டும். தேங்காயினுள் உள்ள பொருட்கள் நன்கு வெந்துவிட்டால், டப் என்று வெடிக்கும்.
* பின் அந்த தேங்காயை நெருப்பில் இருந்து எடுத்து, அந்த ஓட்டினை நீக்கிவிட்டு, இரண்டாக வெட்டினால், சுவையான ஆடி தேங்காய் தயார். இந்த தேங்காயை கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும்.

