609வது இடத்தில் இருந்த அதானி இன்றைக்கு 13வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்..?செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

 
1

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில்,

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பாஜ அரசு எப்போதும் செயல்பட்டதில்லை என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். கடந்த 2019ல் நடைமுறையில் இருந்த கார்ப்பரேட் வரி 40 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன்மூலம் ஒன்றிய பாஜக அரசுக்கு கார்ப்பரேட் வரி வசூலில் 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேபோல, சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பார்ம் நிறுவனம் 2023ல் வெளியிட்ட அறிக்கையின்படி மக்கள் தொகையில் 10 சசதவிகித கோடீஸ்வரர்கள் இந்தியாவின் சொத்து மதிப்பில் 77 சதவிகிதத்தை குவித்து வைத்துள்ளனர். அதேநேரத்தில் 50 சதவிகித மக்கள் அதாவது 67 கோடி இந்தியர்களின் சொத்து மதிப்பு 1 சதவிகிதம் தான் உயர்ந்துள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் சொத்து 2229 சதவீதமும், அம்பானியின் சொத்து 400 சதவீதமும் அதிகரித்திருக்கிறது. உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 2014ம் ஆண்டு 609வது இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம், யார் பொறுப்பு. மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பயனடைந்தார்கள். அதனால் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் மூலம் ரூபாய் 6,572 கோடி குவித்த பிரதமர் மோடி ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு அமலாக்கத்துறையின் சோதனைக்கு பிறகு 32 கார்ப்பரேட் குழுமங்கள் ரூ.335 கோடி நன்கொடையாக வழங்கியதற்கு ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

பாஜ நன்கொடையை குவித்துக் கொண்டு அராஜக வழிமுறைகளை தேர்தல் களத்தில் பின்பற்றி வருகிறது. போதை பொருள் தடுப்புக்காக கொண்டு வரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்கட்சிகளை ஒடுக்குவதற்கு பாஜ பயன்படுத்தி வருகிறது. இத்தகைய பாசிச, சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிற பிரதமர் மோடி வருகிற மக்களவை தேர்தலில் மக்கள் உரிய தீர்ப்பை வழங்கி ஜனநாயகத்தை காப்பாற்றுவார்கள். பாசிசம் வீழப் போகிறது. இந்தியா மீளப் போகிறது.