சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் கொலை - மனைவி தற்கொலை!!
![tn](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/dbd5d02c21f9d00bb0156955767e9128.jpg)
சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை பள்ளிக்கரணை டாஸ்மாக் பாருக்கு அருகில் இளைஞர் ஒருவர் கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரவீன் என்பது தெரியவந்தது. பிரவீன் ஜல்லடியன்பேட்டை சாய் கணேஷ் நகரை சேர்ந்த ஷர்மி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வீட்டை விட்டு வெளியேறிய ஷர்மியை பிரவீன் தனது குடும்பத்தினரின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டு, தனி குடித்தனம் நடத்தி வந்தார்.
பெண் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதால் ஷர்மின் குடும்பத்தினர் அவரின் காதல் கணவர் பிரவீன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். ஷர்மியின் அண்ணன் தினேஷ் அந்த நண்பர்களுடன் சேர்ந்து பிரவினை கொலை செய்ய திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.