பார்-க்குள் குழந்தைகளுக்கு என்ன வேலை..? கொதித்தெழுந்த நீதிமன்றம்..!
சென்னையை அடுத்த திருவேற்காட்டை சேர்ந்த எம். காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அவர் மனுவில், "சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயல் சட்டப்படி தவறானது என்றும், சிறார் நீதிச் சட்டத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ள மனுதாரர் எம். காமேஷ், இதனால் குழந்தைகளின் எதிர் காலம் பாதிக்கப்படும் என்றும், அவர்களின் வாழ்க்கையை அழித்து விடும் என்றும் வேதனையுடன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மது அருந்தும் இடத்தில் குழந்தைகளை அனுமதித்த நட்சத்திர விடுதி நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், புத்தாண்டு நெருங்கும் நிலையில் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களில் குழந்தைகள் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "எதிர் வரும் 2026 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளில் மதுபானம் அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதாக புகார்கள் வந்தால் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


