இது என்ன நியாயம்..! குஜராத்தி இந்தியாவை ஆளும்போது தமிழன் ஆளக்கூடாதா?: சீமான்!

 
1

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், நாளை மறுநாள் ஜூன் 1 ஆம் தேதி, இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதியே லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள் பிஜு ஜனதா தளம் தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்கை விமர்சிப்பதை காட்டிலும் அவருக்கு நெருக்கமான தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனை கடுமையாக விமர்சித்து வந்தனர். நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த விகே பாண்டியனுக்கு கேபினேட் அந்தஸ்து கொண்ட தலைவர் பதவியை வழங்கினார் நவீன் பட்நாயக். கட்சியிலும் ஆட்சியிலும் முதல்வருக்கு அடுத்தபடியாக விகே பாண்டியன் செல்வாக்கு மிகுந்தவராக வலம் வருகிறார். நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகவே திகழ்ந்து வருகிறார் விகே பாண்டியன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான விகே பாண்டியன், ஒடிசா முதல்வரின் வலது கரமாகவும், ஒடிசா அரசில் செல்வாக்கு மிக்கவராகவும் விளங்கி வருகிறார். அடுத்த முதல்வராக விகே பாண்டியனையே நவீன் பட்நாயக் முன்னிறுத்துவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் விகே பாண்டியனை குறி வைத்து பாஜக தலைவர்கள் தாக்கிப் பேசி வருகின்றனர். பிரதமர் மோடி அண்மையில் ஒடிசா மாநிலத்தில் பூரி ஜெகந்நாதர் கோயிலில் வழிபட்டுவிட்டு பின்னர் பிரசாரத்தில் பேசுகையில், ஆறு ஆண்டுகளுக்கு முன் தொலைந்த கோயில் கருவூலத்தின் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாகவும், நவீன் பட்நாயக் அரசு அதை மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முன்னதாக, ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித் ஷா, ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல்வராக வரக்கூடியவர், ஒடியா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என்று பேசினார்.

ஒடிசாவில் செல்வாக்கு மிக்க தமிழராக இருக்கும் விகே பாண்டியனை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருவது பற்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது:-

இந்த பேச்சை எல்லாம் ஏப்ரல் 19-க்கு முன்பாக இவர்கள் பேசியிருக்க வேண்டும். இப்போது தெரிகிறதா எங்கள் தமிழ் தேசிய அரசியல் எவ்வளவு சரியானது என்று? பீகாரியா? பகாரியா? என நிதிஷ் குமார் பேசும்போது ஒன்றும் சொல்லவில்லை. ஒடிசாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பரப்புரையில் தமிழர் ஒருவர் முதல்வராக வருவது குறித்து ஆவேசமாக பேசி இருக்கிறார். அதை யாரும் எதுவும் கேட்கவில்லை. பஞ்சாப் மாநிலத்தை பஞ்சாபி தான் ஆள வேண்டும், அரவிந்த் கெஜ்ரிவாலை ஏன் உள்ளே விடுகிறீர்கள் என பிரதமர் மோடி பேசும்போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று நான் சொன்னால் மட்டும் விமர்சிக்கின்றனர். பிரிவினைவாதம், இன வெறி என்று பேசி எங்களை கேவலப்படுத்தினீர்கள்? அப்படி என்றால் எங்க ஆள் விகே பாண்டியன் இந்தியன் இல்லையா? நாங்கள் இந்தியர் இல்லையா?

ஒரு குஜராத்தி இந்தியாவை ஆளும்போது, தமிழன் ஆளக்கூடாதா? எங்கள் நாட்டை 60 ஆண்டுகளாக எவர் எவரோ ஆளும்போது நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? விகே பாண்டியன் ஒடிசாவில் இன்னும் முதல்வராக ஆளவில்லை, ஆளப் போவதாக ஒரு நிலைமை இருப்பதற்கே இந்த துடி துடிக்கிறீர்களே.. என் மண் என் மக்கள், என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடந்தாரே, இப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு அவர் என்ன சொல்லப் போகிறார்? ஒரு தமிழராக அவரது நிலைப்பாடு என்ன?. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.