பதவியேற்பு விழாவில் நடந்ததை ஆளுநர் உரையின்போது நடக்க அனுமதிக்கக் கூடாது - உதயநிதி ஸ்டாலின்..!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துரை வழங்கினார். அப்போது அவர், "என்னை தேர்ந்தெடுத்த சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கும், திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி.
நேற்று பதவி பிரமாணம் செய்தோம். இன்று சபாநாயகர் தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
நீங்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் என்று அறிகிறேன். பேரவை விதிகள் உங்களுக்கு புதிது கிடையாது. எதிர்கட்சியினருக்கும் ஏற்ற வகையில் செயல்பட வேண்டும். எளிய குடும்பத்தில் இருந்து வந்த துணை சபாநாயகர் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவார்கள் என நினைக்கிறோம்.
முதல்வர் நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்தார். அதே போல் சட்டப் பேரவையில் திமுக எதிரி கட்சியாக இல்லாமல் நல்ல எதிர்க்கட்சியாக செயல்படும். திமுக எப்போதுமே ஆக்க சக்தி தான். நாம் எதிர் எதிரே அமர்ந்திருந்தாலும் தமிழக மக்கள் நலனில் ஒரே வரிசையில் இருக்க வேண்டும்.
பிற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இந்த அவையாக இருக்க வேண்டும். இந்த அரசு வாக்களிக்காத மக்களுக்காகவும் செயல்பட வேண்டும்.
நானும் முதல்வரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இருந்தாலும், அரசியலில் நாங்கள் தான் சீனியர். எங்களுடைய அனுபவத்தையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறோம்.
இந்த முறை ஆளும் கட்சி வரிசைக்கு சமமாத எதிர்க்கட்சிகளின் வரிசை இந்த அவையில் உள்ளது.
பதவியேற்பு விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்து 3 இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆனால், பாஜக ஆளும் மேற்கு வங்கம் மாநிலத்தில் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்படவில்லை.
இந்த அவையில் ஆளுநர் உரை விரைவில் நடைபெறவுள்ளது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எந்த இழுக்கும் ஏற்பட்டு விட நீங்கள் அனுமதிக்க கூடாது. நாங்களும் அனுமதிக்க மாட்டோம். தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முன்பு நடந்த தவறு மீண்டும் நடக்க கூடாது" என்றார்.

