ஊரடங்கு நீட்டிப்பில் அளிக்கப்படவிருக்கும் தளர்வுகள் என்ன?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கடந்த 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது பாதிப்பு சற்றும் குறையாததால், கடந்த வாரத்திலிருந்து கடும் கட்டுப்பாடுகள் உடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு பலனளிக்க தொடங்கி விட்டதாகவும் விரைவில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 7 ஆம் தேதி காலை 6 மணியோடு நிறைவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். டிஜிபி திரிபாதி, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
அக்கூட்டத்தில், தளர்வுகளுடன் ஊரடங்கை நீடிப்பது குறித்தும் பாதிப்பு குறைவாக இருக்கும் மாவட்டங்களில் தளர்வுகள் அளிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. பாதிப்பு அதிகமாக இருக்கும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகள் தொடர வாய்ப்பு இருப்பதாகவும் மேற்கு மாவட்டங்களில் 30% மேல் பாதிப்பு இருப்பதால் அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிகாரிகளுடனான இந்த கூட்டம் முடிந்த பிறகு, ஊரடங்கு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.