இன்று இந்தியாவின் இரும்புப் பெண்மணி மம்தா பானர்ஜி பிறந்தநாள்...
இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று புகழப்படும் மம்தா பானர்ஜி இன்று தனது 67 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இந்திய அரசியலில் வெற்றி வாகை சூடிய பெண் தலைவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே.. அவர்களில் மிக முக்கியமானவர் மம்தா பானர்ஜி. இன்று இந்தியாவில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர்களில் அவர் ஒருவர் மட்டுமே பெண் ஆவார்.. தனது 30 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல தலைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் மம்தா.. இன்று வங்கத்துப் புலி என்று கொண்டாப்படும் அவர், அரசியலில் இத்தனை செல்வாக்குகளை பெற கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை..
தனது இளமைப் பருவம் முதலே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த, 1970 களில் தன்னை அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொண்டார். முதலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், 1976 ஆம் ஆண்டு கட்சியின் மாநில செயலாளராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் 1984ஆம் ஆண்டு தனது 29 வயதில் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். 1989 ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த அவர், துவண்டு போகாமல் மீண்டும் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1992ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகி அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். 1999ஆம் ஆண்டு ரயில்வே அமைச்சரான மம்தா பானர்ஜி அதன்பின்னர் இருமுறை மத்திய அமைச்சராக பதவி வகித்தார்.
2006 ஆம் ஆண்டு நந்திகிராமில் கார் தொழிற்சாலைக்காக விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 25 நாட்கள் மம்தா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த போராட்டம் அவர் மீதான கவனத்தை இந்திய நாடே திரும்பிப் பார்க்கும்படி செய்தது. அதன் பின்னர் அவரது அரசியல் செல்வாக்கும் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. 2011ஆம் ஆண்டு நாடு முழுவதும் மோடி அலை வீசிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் அப்போது ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த மம்தா, பாஜாகவியும் வீழ்த்தி அபார வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்த மம்தா தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். தற்போது 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து ஆறு மாதத்திற்குள் மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதி இடைத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். தற்போது இந்தியாவில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர்களில் ஒரே பெண் முதலமைச்சர் இரும்புப் பெண்மணி மம்தா பானர்ஜி மட்டுமே .. இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..