நாங்கள் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல! - பாஜக-வின் கண்டனங்களுக்கு உதயநிதி பதிலடி..!

 
udhayanidhi Stalin

சட்டப்பேரவையில் மே 14 நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நாம் எல்லாரும் சேர்ந்து ஒன்றாகப் பயணிப்போம். திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைப்படி எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதை உறுதி செய்கின்ற வகையில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்கள் நிச்சயம் செயல்படுவோம்; வெல்க தமிழ், வாழ்க தமிழ்நாடு! மக்களைப் பிரிக்கும் சநாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார். இதற்கு பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன.

விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள அவர், எதிர்ப்பிலேயே வளர்ந்ததுதான் திராவிட இயக்கம்; இதுபோன்ற விமர்சனங்களுக்கு நான் அஞ்சமாட்டேன் என்று கூறி உள்ளார். 

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது யாரும் கோயிலுக்குப் போகக் கூடாது என்பதல்ல; கோயிலிலும் சமூகத்திலும் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதே அதன் பொருள். மேல் சாதி - கீழ் சாதி என மக்களைப் பிரிக்கும் பாகுபாடுகளை ஒழிப்பதையே தான் குறிப்பிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பெரியார், அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்கள் வகுத்துக் கொடுத்த கொள்கைப் பாதையிலேயே தான் பேசியதாக அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

நாங்கள் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் அல்ல; ஆனால் சமத்துவமின்மையையும், ஒடுக்குமுறையையும் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருவள்ளுவரின் வரிகளே தனது அரசியல் மற்றும் கொள்கை வழி என உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.