திமுக அரசை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - அண்ணாமலை பேச்சு..

 
Annamalai

திமுக அரசை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் பாஜக  மாநிலத் தலைவர் அண்ணாமலை  தெரிவித்திருக்கிறார்.

கிருஷ்ணகிரி அருகே பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில்  மாவட்ட பாஜக அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்துவைத்து பார்வையிட்டார். இந்த பாஜக அலுவலக திறப்பு விழா பொதுக் கூட்டத்தில், கலந்துகொண்ட  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் எப்போதும் இல்லாத ஒரு சரித்திரம் இப்போது நமது கண்முன்பு நடக்கிறது. ஒரே நேரத்தில் 10 இடங்களில் நமது கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜே.பி.நட்டா தலைவராக பொறுப்பேற்ற போது தமிழகம் வந்தார். அப்போது மாநில தலைவராக இருந்த முருகன், அவரை அழைத்து சென்று திருவள்ளூர் கட்சி அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். அந்த மாவட்ட அலுவலகத்துடன் சேர்த்து இன்றைய தினம் 10 மாவட்ட அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.

திமுக அரசை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - அண்ணாமலை பேச்சு..

திரிபுரா, மேகாலாயா, நாகலாந்து மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. நம்மை பொறுத்தவரையில் கட்சி அலுவலகம் என்பது நமக்கு கோயில். இக்கட்சி தியாகத்தால் வளர்க்கப்பட்ட கட்சி. எத்தனையோ பேர் கட்சி துண்டு அணிந்து உயிர் விட்டு இருக்கிறார்கள். இன்றைய தினம் கட்சி அலுவலகங்கள் திறப்பதற்கு காரணமாக இருந்த முன்னாள் தலைவர்கள் எல்.முருகன், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

தமிழகத்தில் பாஜக தனி முத்திரை பதித்து வருகிறது. எதிர்த்து குரல் கொடுக்கிறோம். ஒரு தொண்டன் எதிர்த்து கேட்கிறான். சிறை செல்கிறான். மீண்டும் வெளியே வந்து எதிர்த்து கேட்கிறான். மக்கள் பிரச்சினைகளை தட்டி கேட்போம். அதற்காக எந்த பிரச்சினைகள் வந்தாலும் தயங்க மாட்டோம். இது தொண்டர்களுக்கான கட்சி. இதை யாரும் தொட்டு கூட பார்க்க முடியாது. திமுக அரசு அமைந்து 24 மாதங்கள் ஆகிறது. அதனை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இன்னும் 12 மாதங்களில் மக்களவைத் தேர்தல் வர உள்ளது.

திமுக அரசை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் - அண்ணாமலை பேச்சு..

விவசாயிகளுக்கு, மகளிருக்கு, இளைஞர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை மோடி நிறைவேற்றி உள்ளார். 2024 தேர்தலில் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக நாம் வேகமாக பணியாற்ற வேண்டும். அடிமட்டத்தில் இருந்து நாம் கட்சியை பலப்படுத்திட வேண்டும். நமது கட்சி மற்றும் கூட்டணி எம்பிக்கள், மக்களவையில் பணியாற்ற வேண்டும். மக்களின் பிரச்சினைகளை முன்னெடுத்து உங்களுக்கான அரசாக பாஜக உள்ளது” என்று தெரிவித்தார்..