ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு.. 5வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 61 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மாண்டியா, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.எஸ்.ஆர் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி அளவில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம் வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று மாலை 50,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் இன்று காலை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுவிற்கு 61 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் சீறிப்பாய்கிறது. அதுமட்டுமின்றி ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் பாதை முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது.
அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும் பரிசில் சவாரிகள் செய்யவும் தொடர்ந்து 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.