இஸ்லாமியப் பெருமக்களுக்கு சசிகலா ரமலான் வாழ்த்து!!

 
sasikala

 ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்  என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "ரம்ஜான் திருநாள் வாழ்த்துச் செய்தி ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

t n

ரமலான் மாதத்தில் தொழுகை, நோன்பு, ஜகாத், தீமையிலிருந்து விலகியிருத்தல் முதலிய புறக்கடமைகளையும், இறைநம்பிக்கை, இறைவனுக்கு நன்றி செலுத்துதல், நேர்மை, கர்வமின்மை முதலிய அகக்கடமைகளையும் கடைபிடித்து உறுதியான இறை நம்பிக்கையுடன் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, இறைமறையாம் திருக்குர் ஆனை ஓதி, இரவு நேரங்களில் விழித்திருந்து, சிறப்பு தொழுகைகளை நிறைவேற்றி, நல்லறங்கள் பல புரிந்து, இறைவனின் அருளைப் பெற்று அனைவரிடத்திலும் அன்பு பாராட்டி, ஏழை எளியோருக்கு உணவளித்து, உற்றார் உறவினர்களுடன் கூடி மகிழ்ந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக விளங்கிய நம் அம்மா அவர்கள், இஸ்லாமியப் பெருமக்கள் பயனுறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் அரிசி வழங்கினார்; உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 750 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தியதோடு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தியது; வக்ஃப் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையிலுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட பணிக்கொடைகளை வழங்கிட சிறப்பு ஒரு முறை மானியமாக 3 கோடி ரூபாய் வழங்கியது; பள்ளி வாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களில் தொடர்ந்து பழுது நீக்குதல் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக 3 கோடி ரூபாயில் வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதியை உருவாக்கியது!

sasikala

மேலும், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் ஆண்டு நிர்வாக மானியத்தை 10 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாக உயர்த்தியது; ஆதரவற்ற விதவை, ஏழை மற்றும் வயதான இஸ்லாமியப் பெண்களுக்கு உதவிடும்பொருட்டு, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இஸ்லாமியப் பெண்கள் உதவிச் சங்கங்களை அமைத்து, ஒவ்வொரு சங்கத்திற்கும் 20 லட்சம் ரூபாய் வரை இணை மானியம் வழங்கியது; உருது மொழியை ஒரு மொழிப் பாடமாகப் பயின்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தியது; நாகூர் தர்கா சந்தனக்கூடு கந்தூரி திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டு தோறும் இலவசமாக வழங்க ஆணையிட்டது போன்ற உன்னத திட்டங்களால் இஸ்லாமியப் பெருமக்கள் பெரிதும் பயனடைந்தனர் என்பதை இந்நன்னாளில் பெருமிதத்துடன் நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த புனித ரமலான் நோன்பை மேற்கொண்டு, உடலையும் உள்ளத்தையும் தூய்மை செய்து, இறைவனின் திருவருளைப் பெற்று, ஈட்டிய செல்வத்தில் ஒரு பங்கை ஏழை எளியோருக்கு அளித்து இன்புறும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.