பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானிக்கு வாழ்த்துக்கள் - சசிகலா

 
sasikala

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்  எல்.கே.அத்வானிக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவித்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என சசிகலா குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள பதிவில், திரு.எல்.கே.அத்வானி அவர்கள் துணை பிரதமர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். பா.ஜ.கவில் மிகப்பெரும் பொறுப்புகளை வகித்துள்ளார். திரு.எல்.கே.அத்வானி அவர்கள் தனது 14வது வயதிலேயே பொது சேவைகளில் தன்னை  அர்ப்பணித்துக்கொண்டவர். இந்திய ஒற்றுமைக்காக அயராது பாடுபட்டவர். மேலும், இந்திய தேசத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு திரு.எல்.கே. அத்வானி அவர்களுக்கு பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது  அறிவிக்கப்பட்டு இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

sasikala

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது திரு.எல்.கே.அத்வானி அவர்கள் மிகுந்த அன்பையும், மாறாப்பற்றினையும் கொண்டிருந்ததை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்வதில்  மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதேபோன்று, புரட்சித்தலைவி அம்மா அவர்களும் திரு.எல்.கே.அத்வானி அவர்கள் மீது அளவு கடந்த நட்பினை கொண்டிருந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற 'துக்ளக்' தமிழ் வார இதழின் 42-வது ஆண்டு விழாவில்"  திரு.எல்.கே.அத்வானி அவர்கள் “புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் ஒரு இயற்கையான கூட்டாளியை நாங்கள் காண்கிறோம்," என்று பேசியதை இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன். மேலும், மதுரை திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டியில் திரு.எல்.கே.அத்வானி அவர்களின் ரத யாத்திரை சென்ற பாதையில் வைக்கப்பட்ட பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அன்றைய தமிழக காவல்துறை துரிதமாக செயல்பட்டு வெடிகுண்டை உடனடியாக அகற்றி, பெரும் சதிச்செயல் முறியடிக்கப்பட்டது. இதற்காக புரட்சித்தலைவி அம்மா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திரு.எல்.கே.அத்வானி அவர்கள் நன்றி தெரிவித்ததையும் எண்ணிப்பார்க்கிறேன். அதேபோன்று, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் மீண்டும் வெற்றி பெற்றதற்காக, திரு.எல்.கே.அத்வானி அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததையும் இந்நேரத்தில் மகிழ்ச்சியோடு எண்ணிப் பார்க்கிறேன்.


மேலும், திரு.எல்.கே.அத்வானி அவர்கள் போயஸ் கார்டன் இல்லத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களை நேரில் சந்தித்ததையும், அவர்களுக்கு விருந்து அளித்து உபசரித்ததையும் இந்நேரத்தில் எண்ணி பெருமிதம் அடைகிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் திரு.எல்.கே.அத்வானி அவர்கள் நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், மகிழ்ச்சியோடும், நூறாண்டுகளை கடந்தும், பெருவாழ்வு வாழ வேண்டுமென எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.