சட்டவிரோத மதுவிற்பனையை கண்டும் காணாத திமுக அரசு - சசிகலா கண்டனம்

 
sasikala

தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் சட்டவிரோத மதுவிற்பனையை கண்டும் காணாமல் இருந்து வரும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக வி.கே.சசிகலா கூறியுள்ளார். 

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  திமுக தலைமையிலான அரசு தனது இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஏதோ சாதித்துவிட்டதாக சொல்லி எல்லா இடங்களிலும் திமுகவினர் மேடை போட்டு பேசுகின்றனர். ஆனால் இவர்கள் செய்த சாதனைகள் என்னவென்று ஒவ்வொன்றாக நாள்தோறும் வெளிவந்து பொதுமக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்த 24 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தின் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கீழஅலங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிரே உள்ள அரசிடமிருந்து உரிமம் பெற்று தனியாரால் நடத்தப்படும் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த குறிப்பிட்ட பாரில் காலை 11 மணியளவில் அங்கு விற்கப்பட்ட மதுவை வாங்கிக் குடித்த இருவர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

sasikala

அதாவது, தமிழகம் முழுவதும் அரசு உரிமம் பெற்ற டாஸ்மாக் கடைகள் காலை 12 மணிக்கு திறக்கப்படும் போது அதற்கு முன்பாகவே, அதிகாலையிலேயே பார்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. மேலும், தற்போது தமிழகத்தில் செயல்படுகிற பார்களில் மூன்றில் இரண்டு பங்கு உரிமம் பெறாமல் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் அதிர்ச்சியளிக்கின்ற வகையில் தகவல்கள் வருகின்றன. அதேபோன்று, இன்றைய ஆட்சியில் டாஸ்மாக் இல்லாமல் தனியாருக்கு சொந்தமான பிற இடங்களிலும், 24 மணிநேரமும் தங்குதடையின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் சொல்லி வேதனைப்படுகிறார்கள். இதுபோன்று, அனைத்து இடங்களிலும் மதுபானங்கள் எவ்வாறு கிடைக்கிறது? மேலும், இதுபோன்று சட்டவிரோத மதுபான விற்பனைக்கு திமுகவில் உள்ள மேல்மட்டத்தில் இருப்பவர்களின் பரிபூரண ஆசிர்வாதத்தால் நடைபெறுகிறது? என்று பொதுமக்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர். இந்த அளவுக்கு வெட்டவெளிச்சமாக நடக்கும் சட்ட விரோத மதுவிற்பனை பற்றி எவ்வாறு காவல்துறையினருக்கும், வருவாய் துறையினருக்கும் தெரிவதில்லை என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் சம்பந்தப்பட்ட துறையை கவனிக்கும் அமைச்சருக்கோ, தமிழக முதல்வருக்கோ எந்தவித கவலையும் இருப்பதாக தெரியவில்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் திமுக தலைமையிலான அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனையா? இதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா? என்பதை எண்ணிப்பார்க்கையில் மிகவும் வேதனையாக உள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து அதன் பின்னர் பூரண மது விலக்கு என்ற நிலையையும் அடைந்துவிடலாம் என்று உறுதியோடு இருந்தார். விதிவசத்தால் அம்மா அவர்கள் நம்மையெல்லாம் விட்டுச் சென்றதால், தமிழகம் இன்றைக்கு அழிவுப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால், இன்றைய திமுக தலைமையிலான அரசோ மக்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி 24 மணிநேரமும் மது விற்பனை என்ற கொள்கையை பின்பற்றி தமிழ் சமூகத்தை சீரழித்துவருவது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, திமுக தலைமையிலான அரசு தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மது விலக்கை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வகையில் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்திட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.