குடியரசுத் தலைவர் வருகை : கன்னியாகுமரியில் நாளை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..

 
கன்னியாகுமரி

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி நாளை கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், திரிவேணி சங்கமம் உள்ளிட்ட இடங்களுக்கும் செல்லத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி  முர்மு பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் தமிழகத்திற்கு வர இருக்கிறார். அதன்படி   நாளை (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வரும் குடியரசுத் தலைவர்,  அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு சென்று,  தனி படகு மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சென்று  பார்வையிடுகிறார்.

திரௌபதி முர்மு

பின்னர் திருவள்ளுவர் சிலையை பார்வையிடும் அவர், பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபாடு செய்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்துக்கொண்டு  அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார்.  குடியரசுத் தலைவரின்  வருகையை முன்னிட்டு குமரியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.  அதன்படி,  நாளை கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு  செல்ல  சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடபடிக்கையாக  கன்னியாகுமரியில் டிரோன்கள் பறக்கவும்  தடை விதித்து போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்..