புகாரை வாபஸ் வாங்க ரூ 50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள்- விஜயலட்சுமி

புகாரை வாபஸ் வாங்க ரூ 50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாகவும், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கும்படி சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சீமான் ஆஜராகவில்லை.
சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜரானார்.இதை தொடர்ந்து நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பினர் . இந்த சூழலில் யாரும் எதிர்பாக்காத வகையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீது கொடுத்த புகார்களை திரும்ப பெற்று பெங்களூரு திரும்பினார். நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்றாலும் சீமான் 18ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கமளித்தனர். நடிகை விஜயலட்சுமி தனது புகாரை திரும்பப்பெற்ற நிலையில், இன்று காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான ஆஜரானார்.
அப்போது தன் மீது கூறிய குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் கூற வேண்டும் என சீமான் கூறிய நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விஜயலட்சுமி, “சீமான் மீது கூறிய புகார்களை நிரூபிப்பேன். வீரலட்சுமியின் வீட்டிலிருந்து நான் வெளியேறிய போது சாட்டை துரைமுருகனிடம் பேசினேன். புகாரை வாபஸ் வாங்க ரூ 50 ஆயிரம் வங்கிக் கணக்கில் போட்டார்கள்.பாலசுப்பிரமணியன் என்ற வழக்கறிஞரை அனுப்பி வைத்தார் சாட்டை துரைமுருகன். புகாரை வாபஸ் பெற்றுவிட்டு எனது அக்காவுடன் கிளம்பி போக சொன்னார்கள். சாட்டை துரைமுருகனிடம் உள்ள செல்போன் உரையாடல் விவரங்களை எடுத்தாலே சீமான் என்னிடம் பேசியது தெரியும்.. நான் ஏதோ பொய் சொல்லும் பெண்ணாக சீமான் சித்தரிக்க முயன்றால் இந்த மோதல் முடிவுக்கே வராது.” என்றார்.