எடப்பாடியில் சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு
தமிழக வெற்றிக் கழகத்தின் எடப்பாடி தொகுதி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 233 தொகுதிகளில் தவெக போட்டியிடுகிறது. தவெக சார்பாக எடப்பாடி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நித்யாவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. இவர்கள் இருவருமே வேட்புமனுவை முழுமையாக நிரப்பவில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் எடப்பாடி தொகுதி வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு விஜய் ஆதரவு தெரிவித்துள்ளார். பிரேம் குமாருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தை ஆதரிக்க தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார். பிரேம்குமார் ஏற்கனவே தம் மன்றத்தில் பயணித்தவர் என்றும் விஜய் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


