எடை போட்டு பார்த்து கொடுத்த வெற்றி.. நாலாந்தர பேச்சாளர் பழனிசாமிக்கு மக்கள் பதிலடி - முதலமைச்சர் ஸ்டாலின்

 
MK Stalin

‘திமுக ஆட்சியை எடைபோடும் தேர்தலாக, இந்த இடைத்தேர்தல் இருக்கும் என கூறி வந்தேன். திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்’ என்று முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்..

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 53,747 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 20,201 வாக்குகளும்,  நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா 3,939  வாக்குகளும்,  தேமுதிக சார்பில்  போட்டியிட்ட ஆனந்த் 528 வாக்குகளும் பெற்றுள்ளனர்.  கிட்டத்தட்ட 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகிப்பதால், அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து இப்போதே கொண்டாட்டங்களை தொடங்கி விட்டனர்.

மு.க.ஸ்டாலின் மக்களுக்கு நன்றி

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.  அப்போது பேசிய அவர், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வேட்பாளராக நின்ற ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மிகப்பெரிய, மகத்தான, வரலாற்றில் பதிவாகக்கூடிய மாபெரும் வெற்றியைத் தேடி தந்திருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதன்படி, மக்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் 4 ஆம் தர பேச்சாளரைப்போல் பேசிய பேச்சுக்கு மக்கள் ஒரு நல்ல பாடத்தை வழங்கியிருக்கிறார்கள். இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு அச்சாரமாக அமைந்திருப்பது மகிழ்ச்சி. 20 மாத திமுக - திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மிகப்பெரிய வெற்றியை தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மக்களுக்கு நன்றி

மேலும் வெற்றிக்காக உழைத்த அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அனைவரும் நன்றி. நாடாளுமன்றத் தேர்தலில் இதைவிட பெரிய வெற்றி பெறுவோம்' என்றார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், 'நான் ஏற்கெனவே தேசிய அரசியலில் இருக்கிறேன். அதுகுறித்துதான் நேற்றைய பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறேன். யார் பிரதமராக வர வேண்டும் என்பதைவிட யார் ஆட்சியில் இருக்கக் கூடாது யார் பிரதமராக இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் கொள்கை” என்று தெரிவித்தார்.  .