வேங்கைவயல் சம்பவம்- 8 வாரத்திற்குள் விசாரணையை முடிக்க சிபிசிஐடிக்கு உத்தரவு

 
வேங்கைவயல் விவகாரம்

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக 8 வாரத்திற்குள் விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேங்கைவயல் விவகாரம் : 8 பேர் ரத்த மாதிரி தர மறுப்பு..

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் அசுத்தம்  செய்த விவகாரம்  தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஒரு நபர் ஆணையம், இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும்  அமர்வில்  விசாரணைக்கு வந்த போது, நீதிபதி சத்யநாராயணன் ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கை மூடி முத்தரையிட்ட உறையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தாக்கல் செய்திருந்தார். இந்தநிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்ற வழக்கின் விசாரணை எவ்வளவு நாட்கள் நடைபெறும் என கேள்வி எழுப்பினர். அப்போது அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கதிரவன் ஆஜராகி, 324 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறி விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்தார். விசாரணையை  முடிக்க 8 வார கால அவகாசம் தேவை என்றும் குறிப்பிட்டார். பின்னர் விசாரணையை ஏப்ரல் 16ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.