வரத்து அதிகரிப்பு.. கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு..
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை வெகுவாக சரிந்திருக்கிறது.
கோயம்பேடு சந்தை ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படுகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகளும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள் மற்றும் 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. அதனுடன் மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையிலும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறும். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.
இதற்காக கோயம்பேடு சந்தை வளாகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் கோயம்பேடு சந்தைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில்லறை விற்பனை செய்யும் பலரும் , கோயம்பேடு சந்தையில் இருந்தே காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்வர். இந்நிலையில் இன்று கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை சரிந்துள்ளது.
அதன்படி, வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கும், நவீன் தக்காளி கிலோ 15 ரூபாக்கும், நாட்டுத் தக்காளி கிலோ ரூ. 10க்கும் விற்பனையாகிறது. அதேபோல் உருளைக்கிழங்கு கிலோ 40 ரூபாய் முதல் ரூ. 27 வரையிலும், சின்ன வெங்காயம் கிலோ 40 ரூபாய்க்கும், பின்ஸ் கிலோ ரூ60 - ரூ.50 வரையிலும், கேரட் கிலோ ரூ 45 முதல் ரூ.30 வரையிலும், முள்ளங்கி 12 ரூபாய் முதல் ரூ.10 வரையிலும், முட்டை கோஸ் 15 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 28 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 15 ரூபாய்க்கும், அவரைக்காய் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ரூ. 40க்கும் விற்கப்படுகிறது.