வீரப்பன் மகள் கைது.. கண்ணீர் விட்டு கதறல்..!
மேட்டூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வெங்கடாஜலத்தை ஆதரித்து, மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில் அருகே நேற்று அன்புமணி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அங்கு வந்த வித்யா ராணி, பா.ம.க., பிரசார கூட்டத்திற்குள் நுழைந்து அன்புமணியிடம், 'பா.ம.க., தொண்டர்கள் சாலையை மறித்து குறுக்கே நிற்கின்றனர்; எனக்கு வழி விட சொல்லுங்கள்' என்றார். 'அதுபற்றி பிறகு பேசி கொள்ளலாம்' என கூறிய அன்புமணி, பிரசாரத்தை தொடர்ந்தார். இதனால், வித்யா ராணி கதறி அழுதபடி தரையில் அமர்ந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
வித்யா ராணி கூறியதாவது: வீரப்பன் மகள் என்ற ஒரே காரணத்துக்காக, கடந்த 10 நாட்களாக என்னை பின்தொடர்ந்து, என் அன்றாட நடவடிக்கைகளை போலீசார் கண்காணிக்கின்றனர். பல இடங்களில் என் காரை நிறுத்தி சோதனையிடுகின்றனர். தேர்தல் செலவு கணக்கை தினமும் தருமாறு கூறுகின்றனர். அன்புமணி பிரசாரம் செய்து கொண்டிருந்த அந்த இடத்தை எளிதாக கடந்து செல்ல முடியும்.
ஆனால், எங்களை தடுத்த போலீசார், அன்புமணி பிரசாரம் முடிந்த பின் செல்லுமாறு கூறினர். அன்புமணி குடும்பத்தினர் எங்களை சிறு வயதில் இருந்தே வளர்த்தவர்கள். அவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அந்த உரிமையில்தான், கூட்டத்துக்குள் சென்று நேரடியாக அவரிடம் வழிவிடச் சொல்லுமாறு கேட்டேன். ஆனால், போலீசார் என்னை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து விட்டனர். என் மீது வழக்கு பதியாமல், ஸ்டேஷனில் வைத்துள்ளனர்.
இவ்வாறு கூறினார்.


