ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும்- திருமாவளவன்
![திருமா](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/2a9a55cea2fbb86bcaa846522603fb20.jpg)
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விசிக சார்பில் 'வெல்லும் சனநாயகம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் 1. பாலஸ்தீன மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவு, 2. பெரும்பான்மைவாத அரசியலைப் புறக்கணிப்பு, 3. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டுதல், 4. சென்னையை இந்தியாவின் 2வது தலைநகராக அறிவித்தல், 5. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், 6. வழக்காடு மொழியாகத் தமிழை அறிவித்தல், 7. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைத் திரும்பப் பெற வேண்டும், 8. ஆளுநர் பதவியை ஒழித்தல், 9. மாநில அதிகாரங்களை அதிகரிக்க வேண்டும், 10. அமைச்சரவையிலும், மேலவைகளிலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு, 11. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு சட்டம் இயற்றுதல், 12. பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல், 13. வகுப்புவாத வன்முறைத் தடுப்பு சட்டத்தை இயற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய திருமாவளவன், “ஆளுநர் தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே செயல்படுகிறார். மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசால் ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்த விதத்திலும் தேவையாக இல்லை. எனவே ஆளுநர் பதவியை ஒழிக்க வேண்டும். 2018 முதல் 2023 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 575 நீதிபதிகளில் வெறும் 67 பேர் மட்டுமே ஓபிசியை சேர்ந்தவர்கள். 13 பேர்தான் எஸ்.சி. வகுப்பினர், பழங்குடிச் சமூகத்தை சேர்ந்தவர்கள் 9 பேர் தான், சிறுபான்மையினர் 18 பேர். மீதமுள்ள 80% பேர் உயர் சாதிகளைச் சார்ந்தவர்கள். உச்சநீதிமன்றத்திலும் நமக்கு எதிரான தீர்ப்புகள் வருவதற்கு இதுதான் காரணம். நீதிமன்றங்களில் சமூக நிதி இல்லை” என்றார்.