தவெகவை ஆட்சி அமைக்க அனுமதிப்பது தான் ஜனநாயகம்- திருமாவளவன்

 
ச்

மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ராஜஸ்தானில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மறைந்த சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “சினிமாத்துறையில் புகழ் பெற்ற தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி அவர்கள் விபத்தில் காயம் அடைந்து காலமானர் என்ற சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.  விசிக சார்பாக அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். நடிகர் விஜயை  வைத்து 100 ஆவது படத்தை தயாரிக்க ஆசைப்பட்டார். தவெக ஆட்சி அமைக்க முன்கூட்டியே ஆதரவு இருக்கிறது என கடிதம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை, பெரும்பான்மை உள்ள கட்சி என்கின்ற அடிப்படையிலும், தனி பெரும் கட்சி என்ற அடிப்படையிலும் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதற்கு அனுமதி அளிக்க வேண்டும், அதற்கு அனுமதி அளிப்பது  தான் அவர்களுடைய பொறுப்பு. அவரின் கடமை ஆக இருக்கும்.

விசிக உயர்மட்ட குழு கூட்டம் நாளை அல்லது நாளை மறுநாள் என  பத்திரிகைகளில் தவறான தகவல் வந்துள்ளது. எங்களது உயர்மட்ட குழு கூட்டம்  விரைவாக கூடும் அதில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பெரும்பான்மை பெற்றும் ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மூலம் கண்டித்துள்ளது. ஆளுநரின் இந்த நடவடிக்கை  ஏற்புடையது அல்ல, பாஜக தமிழ்நாட்டு அரசியலுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருக்கக் கூடிய தவெகவை ஆட்சி அமைக்க அனுமதிப்பதுதான் ஜனநாயகம். அவ்வாறு இல்லாமல் காலம் தாழ்த்துவது திட்டமிட்டு சதி என்றுதான் ஐயப்படுகிறோம். ஆளுநர் காலம் தாழ்த்தக்கூடாது என்ற வேண்டுகோள் விடுகிறோம். நாங்கள் அவசரப்பட முடியாது. எங்களுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள், அதற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். அவருடைய கோரிக்கையை புறம் தள்ளவில்லை, எங்களது உயர்மட்ட குழுவில் விவாதித்து தான் முடிவு எடுக்க முடியும்” என்றார்.