“ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என எப்போது சொல்லவேண்டுமோ அப்போது சொல்வோம்”- திருமாவளவன்

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய திருமாவளவன், “சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் அதன் மூலம் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி கூறுவது, அவருடைய விருப்பம், கனவு. திமுக கூட்டணி மீது மிகந்த நம்பிக்கை இருக்கிறது. ஆட்சியில் எண்ணற்ற பல நலத்திட்டங்களை இந்த அரசு கொண்டுவந்துள்ளது. ஆகவே திமுக கூட்டணிக்கு பொதுமக்கள் ஏக கோபித்த ஆதரவு வழக்கம்போல் கிடைக்கும். திமுகவில் இருந்து வெளியேற எந்த ஒரு தேவையும் இல்லை.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என எப்போது சொல்லவேண்டுமோ அப்போது சொல்வோம். அதற்கான வாய்ப்புகள் சூழல்கள் புறச்சூழல் எல்லாம் அமைய வேண்டும். கட்சி நலம் தாண்டி மக்கள் நலன், நாட்டு நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம். எங்களது கட்சியை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் சூழல் வரும். அரசியலில் விஜய்க்கு சவால் இருக்கும். இந்தி படித்தால் உலகம் முழுவதும் வேலை கிடைக்கும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இந்தி படித்தவர்கள் தமிழ்நாட்டிற்கு தான் வேலை தேடி வருகின்றனர் என்பதுதான் உண்மை. தமிழர்களை நாகரிகமற்றவர்கள் என்று சொல்பவர்கள் தான் அநாகரிகமானவர்கள். இந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை தேசம் முழுவதும் ஒரே மொழி என்பதை தான் நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.