பரப்புரை வாகனத்தில் ஏறிய இளைஞரை ஓங்கி அடித்த திருமா!

 
s

பெரியகுளத்தில் பரப்புரையின் போது விசிக தலைவர் திருமாவளவன் இளைஞரை அடித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார்.

பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி விசிக வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று முன்தினம் பெரியகுளம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் சாலையில் பிரச்சார வாகனத்தில் நின்று தொண்டர்கள் மத்தியில் திருமாவளவன் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திருமாவளவன் உடன் செல்பி எடுப்பதற்காக பிரச்சார வாகனத்தில் மேலே ஏறிய இளைஞர் ஒருவர், இடையூறு செய்தார். இதனால் ஆவேசமான திருமாவளவன் நான் பேசுவதா வேண்டாமா என? கோபப்பட்டு இளைஞரை கை ஓங்கி தாக்கினார். இந்த சம்பவம் குறித்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்த பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் விளக்கம் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் மது போதையில் அவ்வாறு செய்யவில்லை, தனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்றும் சமூக வலைதளத்தில் தவறான கருத்து பரவி வருவதாகவும், 10 ஆண்டுகளாக திருமாவளவனை செல்போனில் மட்டும் பார்த்து வந்த தனக்கு நேரில் பார்த்ததும் அன்பு மிகுதியால் அவருக்கு முத்தம் கொடுக்கச் மட்டுமே சென்றதாகவும் கூறினார் அவர் கை ஓங்கும் போது நான் விலகி விட்டேன் தலைவர் கை கூட என் மீது படவில்லை, அப்படியே அடித்து இருந்தாலும் எனக்கு எந்த ஆட்சேபனை இல்லை, என்னை அடித்ததை எனது அப்பா அடித்ததாகவே கருதுகிறேன். என் தலைவர் என்னை அடித்ததை நான் மகிழ்ச்சியாகவே கருதுகிறேன் என வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.