18 மாதத்திற்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும்- மத்திய இணை அமைச்சர்

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் வருகிற டிசம்பர் மாதம் விடப்பட்டு, அடுத்து 18 மாதத்திற்குள் முதல் கட்டப் பணிகள் நிறைவு பெறும் என ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் வி. பி .சிங் பாஹல் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அதற்கான அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு, பொறியாளர்கள் அலுவலகத்திற்குள் பணிகள் செய்து வரும் நிலையில், ஒன்றிய சுகாதாரத் துறை இணை அமைச்சர் வி.பி.சிங் பாஹல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டு, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான வரைபடங்களை பார்வையிட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையின் முதன்மை (Superintending Engineer) பொறியாளர் கர்ணன் அலோக் என்பவர் , ஒன்றிய அமைச்சரிடம் இதற்கான விவரத்தினை எடுத்துரைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் .வி.பி.சிங் பாஹல், “வருகின்ற டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டு, 18 மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் கட்ட பணிகள் நிறைவு பெறும். தற்போது வெளி மாவட்டத்தில் இரண்டு கட்டங்களாக பிரிந்து மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொண்டு வருகின்றனர். நான்காவது கட்டத்தில் படிக்கக்கூடிய மாணவர்கள் தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கல்வி பயில்வார்கள் என நம்புகிறேன். மாநில அரசு நிலங்களை ஒப்படைப்பதற்கு தாமதப்படுத்திய காரணத்தினால் இப்பணிகள் தாமதமானது. மத்திய அரசிடம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான தேவையான பணங்கள் இருக்கிறது. இந்தியாவிலேயே அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்” என்றார்.