வைரஸ் காய்ச்சல் பரவலுக்கு திமுக அரசே காரணம் - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

 
Vanathi seenivasan

சுகாதார சீர்கேடுகளாலயே தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும் காய்ச்சல் பரவலுக்கு, தி.மு.க., அரசின் அலட்சியமே காரணம் எனவும் பாஜக மகளிரணி தேசிய தலைவரும், பாஜக எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். 

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட 69வது வார்டில் நலம் என்ற தலைப்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அந்த தொகுதியின் பாஜக எம்.எல்.ஏவும், பாஜக மகளிரணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: தமிழகம் முழுதும் 'டெங்கு' மற்றும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைக்கு செல்வோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.தமிழகம் முழுதும், சீரமைப்பு என்ற பெயரில் மழை நீர், கழிவு நீர் கால்வாய்கள் தோண்டப்பட்டு, பல மாதங்களாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன.

 இதுபோன்ற சுகாதார கேடுகளால், வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. காய்ச்சல் பரவலுக்கு, தி.மு.க., அரசின் அலட்சியமே காரணம்.உடனடியாக கால்வாய் பணிகளை முடித்து, நோய் பரவலை தடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு, காய்ச்சல் குறித்து, அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.