இயக்குநர் சுந்தர்.சி விலகியது ஒரு விபத்தல்ல; திருப்பம்- வைரமுத்து
கமல் தயாரிப்பில் ரஜினியை வைத்து இயக்கவிருந்த 'தலைவர் 173' படத்தில் இருந்து சுந்தர் சி விலகியது திருப்பம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173-வது படத்தை சுந்தர்.சி. இயக்குவதாகவும், கமல்ஹாசன் அப்படத்தைத் தயாரிக்கவிருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது. அதன்பின் சில நாட்களிலேயே தவிர்க்க முடியாத காரணங்களால் சுந்தர் சி 'தலைவர் 173' படத்திலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கமல்ஹாசன், “என்னுடைய நட்சத்திரத்திற்குப் பிடித்தக் கதையைத்தான் நான் எடுக்க முடியும், அவருக்குப் (ரஜினி) பிடிக்கும்வரை நாங்க கதையைக் கேட்டுக் கிட்டே இருப்போம். நல்ல கதை கிடைத்தவுடன் நிச்சயம் என்னுடைய தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படம் வெளியாகும்” என்றார்.
இந்நிலையில் இதொடர்பாக வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில், “சூப்பர் ஸ்டாரும்
உலக நாயகனும்
இந்தியக் கலையுலகின்
இருபெரும் ஆளுமைகள்
அவர்கள் இணைந்து
இயங்குவது என்பது
அட்லாண்டிக்கும் பசிபிக்கும்
ஆரத் தழுவிக்கொள்வது போன்றது
அவர்கள் தொட்டது
துலங்கவே செய்யும்
இயக்குநர் சுந்தர்.சி விலகியது
ஒரு விபத்தல்ல; திருப்பம்
அதில் யாரும்
கள்ளச் சந்தோஷம்
அடைய வேண்டாம்
வளைந்து செல்லும் நதி
ஒரு திருப்பத்திற்குப் பிறகு
வேகமெடுக்கும் என்பதே விதி
மாற்றம் ஒன்றே மாறாதது
‘அண்ணாமலை’ படத்தில்
வந்தேண்டா பால்காரன் பாடல்
எழுதுகிற வரைக்கும்
இயக்குநர் வசந்த் உடனிருந்தார்
ஏதோ ஒரு சூழலில்
அவர் விலக நேர்ந்தது
48 மணி நேரத்திற்குள்
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்
தன் இன்னொரு சீடனை
இயக்குநர் ஆக்கினார்;
சுரேஷ் கிருஷ்ணா
அது
ரஜினி வரலாற்றில்
தடம்பதித்த படமாயிற்று
இந்த மாற்றமும்
அப்படியொரு வெற்றியை எட்டலாம்
குழப்பம் கொடிகட்டும்
இந்தப் பொழுதில்
இருபெரும் கலைஞர்களுக்கும்
நாம் ஊக்கமும் உற்சாகமும்
ஊட்ட வேண்டும்
ஏனென்றால்
அரைநூற்றாண்டுக்கு மேல்
மக்களுக்கு மகிழ்ச்சிகொடுத்த
கலைஞர்கள் அவர்கள்
தொடருங்கள் தோழர்களே!
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.


