டிரம்புக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடிவாளம்..!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணமாக கூறி கடந்த ஆண்டு, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். இந்த வரிகளை அமல்படுத்த, அமெரிக்க பார்லிமென்ட்டான காங்கிரஸிடம் ஒப்புதல் பெறவில்லை. அதற்கு பதில், அந்நாட்டின் சர்வதேச பொருளாதார அவசர அதிகாரங்கள் சட்டத்தை பயன்படுத்தினார். டிரம்புக்கு முன் அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்கள் இந்த சட்டத்தை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பொருளாதார தடைகளை மட்டுமே விதித்துள்ளனர். எந்த நாட்டிற்கும் வரி விதிப்புகளை அமல் படுத்தியது இல்லை. டிரம்பின் வரி விதிப்பால் இறக்குமதி பொருட்களின் விலை அமெரிக்காவில் அதிகரித்தது. இதனால் உள்நாட்டு வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் 12 மாகாண அரசுகள் சார்பில் டிரம்பின் வரி விதிப்பு உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பரில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஒன்பது நீதிபதிகள் அமர்வில் விரைவாக விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. 9 நீதிபதிகளில், 6 பேர், 'அமெரிக்க அதிபருக்கு அவசர சட்டத்தை பயன்படுத்தி எந்த ஒரு நாட்டிற்கும் வரி விதிக்கும் அதிகாரம் இல்லை' என, தீர்ப்பளித்தனர்.
சர்வதேச பொருளாதார அவசர அதிகாரங்கள் சட்டம் அதிபருக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. ஆனால், எந்த நாட்டு பொருளுக்கும், எவ்வளவு வேண்டுமானாலும் வரி விதிக்கும் சுதந்திர அதிகாரத்தை அதிபர் கோருகிறார். இதற்காக அவசர சட்டத்தில் உள்ள 'கட்டுப்பாடு' மற்றும் 'இறக்குமதி' என்ற இரு வார்த்தைகளை அடிப்படையாக வைத்து அதிகாரம் உண்டு என்கிறார். இந்த வார்த்தைகள், வரம்பற்ற வரி விதிக்கும் அதிகாரத்தை ஆதரிக்கும் அளவுக்கு தெளிவானவை அல்ல. இத்தகைய பரந்த அதிகாரத்திற்கு பார்லிமென்ட்டின் அங்கீகாரம் தேவை. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் அதிபர் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் செல்லாதவை ஆகியுள்ளன. இருப்பினும் பிற சட்ட பிரிவுகளை பயன்படுத்தி அதிபர் டிரம்ப் தன் வரி விதிக்கும் அதிகாரத்தை மீண்டும் தக்க வைக்க வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

