சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன- உதயநிதி

சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் வைத்து 17,000 பொதுமக்களுக்கு பட்டா வழங்கிய பின் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்று ஒன்றிய அரசின் நிதி ஆயோக் புள்ளிவிவரங்கள் தெரிவித்திருக்கிறது. பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க மூத்த அமைச்சர்கள் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குழுவை அமைத்த பிறகு, சென்னை மற்றும் புறநகரில் 36,000 பட்டாக்களை தயார் செய்து, 20,000 பட்டாக்களை நேரடியாக வழங்கியுள்ளேன்.
சாம்சங் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனம், அதற்கென்று சில கட்டுப்பாடுகள் உள்ளன.பன்னாட்டு நிறுவனம் என்பதால் அரசியல் இயக்கம் சார்ந்த தொழிற்சங்கத்திற்கு அனுமதி இல்லை என அவர்கள் தரப்பில் கூறுகின்றனர். சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்றார்.