“தமிழகத்தை மீட்போம் என சுற்றும் எடப்பாடி பழனிசாமியை முதலில் பாஜகவிடமிருந்து மீட்க வேண்டும்”- உதயநிதி ஸ்டாலின்
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற வாசகத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமியை முதலில் பிஜேபியிடம் இருந்து மீட்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பகுதி , மண்டல, பாக புதிய நிர்வாகிகள் அறிமுக விழாவில் துணை முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொண்டர்கள் மத்தியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “நிர்வாகிகள் 2026 தேர்தலை கவனத்தில் வைத்து செயல்பட வேண்டும், 2026 ஆட்சிக்கு வர நாம் பாடுபட வேண்டும். நம் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும். நம் முதலமைச்சர் நலமுடன் உள்ளார், இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார், பணிகளை மருத்துவமனையில் இருந்தவரே செய்து வருகிறார். தமிழகத்தை மீட்போம் என்ற வாசகத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமியை முதலில் பிஜேபி இடம் இருந்து மீட்க வேண்டும். திமுக நிர்வாகிகள் கவனத்துடன் கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும், எந்த இடத்திலும் தவறுகளை செய்யக்கூடாது. ஊடகங்களில் பேசும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தினார்.


