"ஈபிஎஸ் டெல்லிக்கு முக்கியமான யாரையோ பாக்கப்போறதா சொல்றாங்க...இதை மட்டும் செய்யுங்க"- உதயநிதி ஸ்டாலின்

டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி அவர் சந்திக்கும் நபரிடம் இரு மொழிக்கொள்கை குறித்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக ஸ்தூபா ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் ( Stupa Sports Analytics ) மற்றும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (UTT) இணைந்து நடத்தும் WTT World Table Tennis Star Contender chennai 2025 டிராபியின் கோப்பையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் வரும் 30 ஆம் தேதி வரை இந்த WTT டேபிள் டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது. கடந்த 2023 - 2024 ஆண்டுகளுக்கான இந்த தொடர் கோவாவில் நடைபெற்ற நிலையில் நடப்பாண்டுக்கான தொடர் முதன் முறையாக சென்னையில் நடைபெறுகிறது. இன்று மற்றும் நாளையும் நடப்பு ஆண்டுக்கான தொடரின் தகுதி சுற்றும் இதை தொடர்ந்து 27-ம் தேதி முதல் பிரதான சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த தொடரின் மொத்த பரிசு தொகை 2 லட்சத்து 75 ஆயிரம் அமெரிக்கா டாலாராக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றையர் பிரிவில் 48 வீரர்களும், இரட்டையர் பிரிவில் 16 குழுவும் இடம் பெற்றுள்ளது. ஆடவர் ஒற்றை, மகளிர் ஒற்றை, ஆடவர் இரட்டையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளது. 25 நாடுகளை சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்று உள்ளனர். இந்திய வீரர்கள் 19 பேர் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டின் சரத் கமல் இந்த தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “WTT World Table Tennis Star Contender chennai 2025 டிராபியின் போட்டிகளை இன்று தொடங்கி வைத்துள்ளோம். இதற்காக தமிழக அரசு 3 கோடியே 20 லட்சம் ஒதுக்கி உள்ளது. 25 நாடுகளை சேர்ந்த158 வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து 19 வீரர் வீராங்கனைகள் இந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்துக்கொள்ள உள்ளனர். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். அதனை தொடர்ந்து வலியுத்துவோம். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி அவர் சந்திக்கும் நபரிடம் தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் கடைபிடிப்போம் என அழுத்தமாக சொல்ல வேண்டும். முதலமைச்சர் கேட்டுக்கொண்டது போல முக்கியமான யாரையோ ஈபிஎஸ் பார்க்க போவதாக சொல்கிறார்கள். அப்படி அவர்களை சந்திக்கும் போது இரு மொழி கொள்கை குறித்து தயவு செய்து அதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள் வைத்துள்ளார்” என்றார்.