உதயநிதி ஸ்டாலின் தொடங்கிய முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு முன்பதிவு..!

 
1 1
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறார்.

கடந்த 2024-ம் ஆண்டு முதல்வர் கோப்பைக்கான மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு 83.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சிறப்பாக நடத்தப்பட்டன. இந்த ஆண்டு (2025) முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்  அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் வருகின்ற 22.8.2025 முதல் 12.9.2025 வரை நடத்தப்படவுள்ளன.

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான https://cmtrophy.sdat.in, https://sdat.tn.gov.in வாயிலாக 17.7.2025 முதல் முன்பதிவு செய்து தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். முன்பதிவு செய்திட கடைசி நாள் 16.8.2025 மாலை 6.00 மணி ஆகும்.

தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக 1 லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசாக தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் சிறப்பு மதிப்பெண்கள் மற்றும் சலுகைகள் பெற இயலும்.

ஆடுகளம் தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 9514 000 777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.