கலைஞர் இல்லத்துக்கு உதயநிதி ஸ்டாலின் திடீர் விசிட்! வருகை பதிவேட்டில் எழுதியது என்ன?

 
உதயநிதி

முதல்வரின் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் வழிநெடுகிலும் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகாணப்படுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Image

தமிழகத்தின் மறைந்த முதல்வர் கலைஞர் பிறந்த இல்லமான நாகை மாவட்டம் திருக்குவளை இல்லத்திற்குதமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை புரிந்தார். அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக கலைஞர் பிறந்த இல்லத்திற்கு வருகைதந்த உதயநிதிக்கு திமுக நாகைமாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையிலான திமுக தொண்டர்கள் நாகை மாவட்ட எல்லையானகொலப்பாடு பகுதியில் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

பின்னர் திருக்குவளை இல்லம் வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் தாய் தந்தை அஞ்சுகம் முத்துவேல் , மறைந்த மத்திய அமைச்சர் முரசொலிமாறன், மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுகவினர் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பேட், பந்து உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்களை பரிசாக வழங்கினார். பின்னர் கலைஞர் இல்ல நினைவகத்தில் குறிப்பு எழுதினார். அதில், “2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் துவக்கம் 2020 நவம்பர் 20 ஆம் தேதி தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லம் முன்பு தொடங்கி கைதானோம். இன்று அமைச்சராசி முதல் முறையாக மீண்டும் வருகை புரிந்துள்ளேன். பேரறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணி ஆற்றுவோம்” என்று குறிப்பிட்டு கையெழுத்திட்டுள்ளார்.

வருகைப் பதிவேடு

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “விடியலை நோக்கி பிரச்சாரத்தில் கடந்த ஆட்சியில் இதே கலைஞர் இல்லம் முன்பு கைதானேன். தற்போது அமைச்சராக வந்துள்ள தருணம் மகிழ்ச்சி அளிக்கிறது. மறைந்த முதல்வர் கலைஞர் மற்றும் தற்போதைய முதல்வர் வழியில் மக்கள் பணியாற்றுவேன். செல்லும் வழியெல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. முதல்வரின் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கிறார்கள். அவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.