ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக்குழந்தைகளை பயன்படுத்தாதீர்கள் - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்..!!

 
1

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவிகளிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார். அதற்கு சில மாணவிகள் பதிலளிக்க முடியாமல் இருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஆசிரியையிடம், அமைச்சர் கீர்த்தனா, “லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்” என தெரிவித்தார்.

மாணவிகளிடையே லாஸ்ட் பெஞ்ச் என அமைச்சர் கீர்த்தனா பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த விவகாரத்திற்கு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.


அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல! மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள். தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும்” எனத் தெரிவித்துள்ளார்.



இதேபோல், இந்த விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.

மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும். நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.