மே 14 உதகை ரோஜா கண்காட்சி தொடக்கம்
உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற அரசு ரோஜா பூங்காவில் மே 14-ந்தேதி (வியாழன்) ரோஜா கண்காட்சி தொடங்க உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை சீசன் காலமாகும். அப்போது நிலவும் இதமான காலநிலையில் சுற்றுலா தலங்களை பார்த்து ரசிப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக. அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும். குறிப்பாக மே மாதம் முதல் வாரத்திலேயே காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் காரணமாக ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி மற்றும் மலைப்பயிர்கள் கண்காட்சி ஆகிய கண்காட்சிகள் மட்டுமே நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கும் வகையில் ரோஜா பூங்காவில் வரும் 14ஆம் தேதி காலை உதகை அரசு ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி தொடங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சி 18ஆம் தேதி மாலை நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 3 நாட்கள் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 5 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

