புழல் அருகே விஷவாயு தாக்கி இருவர் பலி

 
விஷவாயு தாக்கி இரண்டு தொழிலாளர்கள் பரிதாப பலி.. தமிழகத்தில் தொடரும் மரணங்கள்!

புழல் அருகே வீட்டில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் அடுத்த காவாங்கரை குருசாந்தி நகர் பகுதியில் வசித்து நிர்மலா. உடல்நலக் குறைவால் கணவர் இறந்த நிலையில், தனதுஇரண்டு அடுக்கு மாடி வீட்டில் உள்ள வீடுகளை இவர் வாடகைக்கு விட்டு வசித்து வந்துள்ளார். இவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு மொன்டியம்மன் நகரை சேர்ந்த கணேசன் என்பவரை அணுகியுள்ளார். கணேசன் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன், இஸ்மாயில் ஆகிய இரண்டு தொழிலாளர்களை அழைத்து கொண்டு மூவரும் நிர்மலா வீட்டிற்கு சென்றுள்ளனர். 

இவர்கள் வீட்டில் இருந்த கழிவு நீர் தொட்டி மூடியை திறந்து சுத்தம் செய்வதற்காக பாஸ்கரன், இஸ்மாயில் ஆகிய இருவரும் உள்ளே இறங்கியுள்ளனர். கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்த போது திடீரென இருவருக்கும் விஷவாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர். நீண்ட நேரமாக வெளியே வராததை கண்டு அங்கிருந்த கணேசன் புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களுடன் கழிவுநீர் தொட்டியில் இறங்கி மயங்கிய நிலையில் கிடந்த 2 தொழிலாளர்களை கயிறு கட்டி சடலமாக மீட்டனர். 

இதனையடுத்து இருவரது சடலங்களை கைப்பற்றிய புழல் போலீசார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத ப‌ரிசோதனை‌க்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து புழல் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.