தரங்கம்பாடி கடற்கரையில் மூழ்கி இருவர் பலி! நேற்று நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் சோகம்

 
தரங்கம்பாடி கடற்கரை

தரங்கம்பாடி கடற்கரையில் குளிக்க சென்ற திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை மற்றும் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மணமகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

தரங்கம்பாடி கடற்கரை வெறிச்சோடியது- Dinamani

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வீரபத்திரர்கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் நவீன்குமார். இவர் பால்வியாபாரம் செய்துவந்தார்.  இவருக்கும் கும்பகோணம் செக்கடித்தெருவை சேர்ந்த நிவேதா, இவர் பெண்கள்கல்லுரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்துவந் தார். இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இன்று காலை இருவீட்டாரின் உறவினர்கள் 25பேர் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  மதியம் அனைவரும் தரங்கம்பாடி கடலில்  குளித்துக்  கொண்டிருந்தபோது நவீன்குமார், நிவேதா மற்றும் சரவணன் என்ற சிறுவன் ஆகியோர் ராட்சஸ அலையில் சிக்கி உயிருக்குப் போராடினர். 

உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கடலில் இறங்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டனர். நிவேதாவை மயக்க நிலையில் மீட்டனர்.  நவீன்குமார் மற்றும் சரவணனை மீட்டு கரைக்குக் கொண்டு சென்று பார்த்தபோது இருவரும் இறந்துவிட்டனர். இருவரது உடல்களும் மயிலாடுதுறை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நிவேதாவை நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பொறையார் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். திருமண நிச்சயதார்த்தம் நடந்து ஒருநாள் திரும்புவதற்குள் புதுமாப்பிள்ளை மற்றும் 6ஆம் வகுப்பு படித்துவந்த சரவணனும் இறந்தது கும்பகோணம் பகுதியில் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.