டாஸ்மாக் மதுவால் அடுத்தடுத்து இருவர் பலி! தஞ்சையில் பரபரப்பு

 
tasmac

தஞ்சையில்  அளவுக்கு  அதிகமாக  பிளாக் பியர்ல் எனும்  டாஸ்மாக் மதுவை  காலையில் இருந்தே கட்டிங், கட்டிங்காக வாங்கி குடித்த மீன் வியாபாரிகள் இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தஞ்சாவூர் கீழவாசல் மீன் மார்க்கெட் எதிரில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்று கிழமை என்பதால் மீன் வியாபாரம் அதிக அளவில் நடைபெற்று வந்த நிலையில், டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே கடையின் அருகே இருந்த மதுபான பாரில் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதனை வாங்கி குடித்த  மீன் வியாபாரி  68 வயது  குப்புசாமி என்ற முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயரிழந்தார்.

மேலும்  விவேக் என்ற 36 வயது இளைஞர் ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் இதனை  அடுத்து தஞ்சை கிழக்கு காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் டாஸ்மாக் கடையை ஆய்வு செய்தார். பிளாக் பியரல் எனும் மதுவை அவ்வப்போது கட்டிங், கட்டிங்காக வாங்கி அளவிற்கு அதிகமாக குடித்ததால் இருவரும் இறந்து விட்டதாக முதல்கட்ட தகவலில் கூறப்படுகிறது.