திருமணம் செய்து கொண்டு காதலனுடன் தப்ப முயன்ற 17 வயது சிறுமி கடத்தல்- இருவர் கைது

 
ச் ச்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 19 வயது கல்லூரி மாணவன், 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு, காவல் நிலையத்திற்கு செல்லும்போது ஆம்னி வேனை வழிமறித்து சினிமா பாணியில் அடித்து நொறுக்கி சிறுமியை கடத்திச் சென்ற சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் 19 வயது சிறுவன் மற்றும் அப்பள்ளி சிறுமி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்ய பெற்றோர், திட்டமிட்டு இருந்த நிலையில், இதுகுறித்து சிறுமி தனது காதலனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து கல்லூரி மாணவன், சிறுமியின் ஊருக்குச் சென்று சிறுமியை அழைத்துக் கொண்டு அய்யர் மலைப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை சிறுவன் அம்மாபேட்டையில் உள்ள தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவரது பெற்றோரும் அய்யர் மலைக்கு வந்துள்ளனர். அவர்கள் ஒரு வாடகை ஆம்னி வேனில் மகனையும் திருமணம் செய்த சிறுமியையும் தோகைமலை காவல் நிலையத்திற்கு ஆஜராக அழைத்துச் சென்றுள்ளனர். குளித்தலை- மணப்பாறை சாலையில் சென்றபோது அக்காண்டி மேடு என்ற இடத்தில் சிறுமியின் உறவினர்கள் வந்து வேனை மறித்து, அடித்து நொறுக்கி வேனில் இருந்த சிறுவனின் உறவினர்களை அடித்து உதைத்து  சிறுமியை கடத்தி சென்றனர். சம்பவம் பிரதான சாலையில் சினிமா பாணியில் நடந்ததால் சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் வந்ததால் சம்பவம் பரபரப்பானது.

சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை போலீசார் காயம் அடைந்த, கல்லூரி சிறுவன் மற்றும் அவரது தம்பியை தோகை மலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் காரை அடித்து சேதப்படுத்தி, சிறுவன் மற்றும் அவரது தம்பியை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்து சிறுமியின் உறவினர்களளான கழுகூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்ரமணி (வயது 48), பிச்சைமுத்து மகன் சஞ்சய் (வயது 20)  ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.