"இது என்னப்பா புது ட்ரெண்டா இருக்கு.." ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர் சகோதரிகள்
![மாணவர்கள்](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/cdb51664578e82923ff12f05a3b4eb1c.png)
அவிநாசியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் இரட்டை சகோதரிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இருவரும் ஒரே மாதிரியாக 484 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள சூளைப் பகுதியில் இருக்கும் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முருகமணி (39). இவரது கணவர் முத்துக்குமரன் கடந்த 10 ஆண்டுகள் முன்பு இறந்துவிட்டார். முருகமணி பனியன் கம்பனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். எம்.ஹரிணி மற்றும் எம்.சபரி ஸ்ரீ என இரட்டையர்களான மகள்களுடன் வசித்து வருகிறார். எம்.ஹரிணி மற்றும் எம்.சபரி ஸ்ரீ ஆகிய இரட்டை சகோதரிகள், அவிநாசியில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவந்தனர்.
இன்று வெளியான 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவில் இரட்டையர் சகோதரிகள் இருவரும் 484 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, காலை 4 மணி முதல் படித்தும், ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன், அம்மாவின் அரவணைப்பு மற்றும் ஊக்கத்துடன் நன்றாக படித்து நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருவரும் ஒரே மாதிரியாக 484 மதிப்பெண்களை பெற்றுள்ளோம். மேலும் மேற்படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று எங்கள் அம்மாவை நல்லபடியாக பார்த்துக் கொள்வோம் என்றனர்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்து பனியன் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வரும் தாயின் அரவணைப்பில் வளர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரட்டை சகோதரிகளான இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று தாய்க்கு பெருமை சேர்த்தது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியது.