தவெக ஆட்சி 100 நாட்கள்.. இதுவரை செஞ்சது என்ன? லிஸ்ட் எடுக்க முதல்வர் விஜய் உத்தரவு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று,. காங்கிரஸ், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மே 10ம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் ஊழலுக்கு எள்ளளவும் இடமில்லை; லஞ்சமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவதே நமது அரசின் தலையாய இலக்கு என்று உறுதியாகப் பிரகடனம் செய்தார். இந்த நிலையில், ஆட்சி அமைந்த முதல் நாளிலிருந்தே பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது அல்லது முறைகேடுகள் நடப்பது குறித்து பொதுமக்கள் எந்தவித பயமுமின்றி நேரடியாகப் புகார்களைப் பதிவு செய்ய சிறப்பு வாட்ஸ்அப் உதவி எண் வெளியிடப்பட்டது. இதன் மூலம் பெறப்படும் புகார்கள் மீது முதலமைச்சரின் தனிப் பிரிவு நேரடியாகக் கவனம் செலுத்தி, உடனடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதை முதன்மை இலக்காகக் கொண்டு, முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் சிங்கப்பெண் என்ற சிறப்பு அதிரடிப் படை உருவாக்கப்பட்டது. இந்த அதிரடிப் படை 24 மணி நேரமும் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டன.
அரசின் இந்த அறிவிப்பு, மாநிலத்தின் லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது. அனைத்துக் வீட்டு மின் நுகர்வோருக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட வாழ்வாதாரத்திற்குப் பெரும் பொருளாதார ஊக்கமாக அமைந்துள்ளது. இவை தவிர, பள்ளி மற்றும் உயர்கல்வித் துறை, மருத்துவத் துறை, இளைஞர் நலன், உட்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை ஆகிய பல்வேறு துறைகளின் சார்பில் கடந்த 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், வெளியிடப்பட்ட புதிய அரசாணைகள் மற்றும் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த விரிவான பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் தலைமைச் செயலகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 100-வது நாள் நிறைவு விழாவை ஒட்டி, முதலமைச்சர் விஜய் இந்தச் சாதனை விளக்கப் புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்றும், தமிழக மக்களுக்கான மேலும் பல புதிய வளர்ச்சி அறிவிப்புகள் அன்றைய தினம் வெளியாகும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

