ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்குமா?- தீர்ப்பை ஒத்திவைத்த ஐகோர்ட்
ஜனநாயகன் படத்தின் சென்சார் சான்றிதழ் கோரும் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கும்படி, உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட சான்றிதல் வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, ஜனநாயகன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆஜராகினர். சென்சார் போர்டு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகினர்.
அப்போது, கடந்த 6ம் தேதி இந்த வழக்கு தொடரும் போதே, இந்த படம் மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என்பது பட நிறுவனத்துக்கு தெரியும். ஆனால் அவர்கள் அதை எதிர்த்து வழக்கு தொடரவில்லை எனக் கூறிய சென்சார் போர்டு, படத்தில் 14 காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், அதன்பின் படத்தை மீண்டும் பார்த்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 14 காட்சிகளை நீக்கி விட்டதால் சென்சார் சான்று வழங்கக் கோரினார்கள். சினிமாட்டோகிராஃப் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம். ஜனநாயகன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது எனக் கூறியது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “மண்டல அலுவலர் படத்தைப் பார்த்தாரா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு சென்சார் போர்டு அவர் படத்தைப் பார்க்கவில்லை, குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது என பதில் அளித்தது. சென்சார் போர்டில் யார் படத்தைப் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? எனக் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழுதான் படத்தை பார்த்துள்ளது என சென்சார் போர்டு பதில் அளித்தது. டத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து தணிக்கை வாரியம்தான் இறுதி முடிவு அறிவிக்கும். மண்டல அலுவலகத்தில் உள்ள ஆய்வுக் குழுவின் முடிவுகள், தணிக்கை வாரியத்தை கட்டுபடுத்தாது எனக் கூறிய சென்சார் போர்டு தரப்பு, சினிமோட்டோகிராபி சட்டப்படியும், விதிகளின்படியும் 72 நிமிடங்களுக்கு மேல் நீளமான படமாக இருந்தால் சென்சார் போர்டு தலைவர்தான் இறுதி முடிவெடுக்க வேண்டும். வழக்கில் சென்சார் போர்டு பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது. ஜனவரி 6ம் தேதியில் சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த முடிவையும், தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். ஆனால் தயாரிப்பாளர் அந்த கோரிக்கையையே முன்வைக்கவில்லை எனக் கூறியது.
ஒருவர் வாரியத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும், வாரியம் ஆய்வு செய்த பிறகு ஒப்புதல் அளிக்கும். அதன் பிறகுதான் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்சார் சான்று வழங்க பின்பற்றப்படும் நடைமுறைகளை சினிமாட்டோகிராப் சட்ட விதிகளை மேற்கோள்காட்டி வாதத்தை முன் வைத்தது. மேலும், மறுஆய்வு குழுவானது, விண்ணப்பித்த 20 நாளில் அமைக்கப்படும். ஜனநாயகன் திரைப்படம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இல்லாவிட்டால் படம் மறுஆய்வு செய்யப்பட்டிருக்கும், இக்குழு சான்று வழங்க மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் சென்சார் போர்டு கூறியது. இதற்கு தயாரிப்பு நிறுவனம், “படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கவில்லை.தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை.வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது” என விளக்கம் அளித்தது. உடனே படத்திற்கு எதிராக புகார் யாரிடம் கிடைத்தது ? - நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு சென்சார் போர்டு தரப்பு, மும்பையில் உள்ள சென்சார் போர்டு தலைவரிடம் புகார் கிடைத்தது. சான்றிதழ் கொடுக்கும் வரை புகார் கொடுத்து யார் என்பதை படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு தெரிவிக்க கூடாது என்றது. உடனே படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பு, சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது என தனது வாதத்தை முன் வைத்தது. இதனை கேட்ட நீதிபதிகள், சென்சார் போர்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விரிவான உத்தரவு எங்கே? உத்தரவு இல்லாமல் எப்படி வழக்கு தொடர முடியும்? எனக் கேள்வி எழுப்பி வழக்கில் உத்தரவை ஒத்திவைத்தனர்.


