“தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்களை சந்திப்பேன்”- விஜய்
தவெக வேட்பாளர்களுடன் விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தவெக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது பூத் கமிட்டி உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு விஜய் நன்றி சொன்னார். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்களை சந்திப்பேன் என்றும் அவர் கூறினார். மே 4ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று வெற்றிப்பெறும் த.வெ.க வேட்பாளர்கள் உடனடியாக எவ்வளவு நேரமானாலும் பனையூருக்கு வர வேண்டும் எனவும், வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் இன்று வேட்பாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்றுமுன் தினம் அதிகாலை 5 மணிக்கு திருச்செந்தூர் சென்ற விஜய், கடலில் நீராடிய பிறகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அவர் சீரடி கோயிலில் தரிசனம் செய்தார்.

