“பரந்தூர் அடுத்த 2 ஜியா? “போச்சே!” என விதவிதமாக ஒப்பாரி”- தவெக விமர்சனம்
பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என்ற அறிவிப்பிற்கு, “தமிழ்நாடு அவ்வளவுதான்” என்று அவதூறு பிரச்சாரம் செய்பவர்களின் கதறலுக்கு காரணம் இருக்கிறது என தவெக விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தவெக தனது எக்ஸ் தளத்தில், “பல்லாயிரம் கோடி பறந்துபோனதா? பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என்ற அறிவிப்பிற்கு, “தமிழ்நாடு அவ்வளவுதான்” என்று அவதூறு பிரச்சாரம் செய்பவர்களின் கதறலுக்கு காரணம் இருக்கிறது. Business பார்த்துவிடலாம் என்று கணக்குப் போட்டு, சில இலட்சங்கள் போகும் இடங்களை பல கோடிகளாக விலையேற்றி, பல்லாயிரம் கோடி செலவழித்து இடம் வாங்கிப் போட்ட தீயசக்தியினருக்கு, இந்த அறிவிப்பு காலில் சுடுதண்ணியை ஊற்றியது போல இருக்கிறது.
இடத்தை வைத்து மடத்தைப் பிடிக்க நினைத்த கதை பொய்த்துப்போனதே என்ற ஒவ்வாமையில், தீயசக்தியுடன் தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து விதவிதமாக ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். களத்தில் இல்லாதவர்கள் வேறு, “போச்சே!” என்று குமுறிக் கொண்டிருக்கிறார்களாம். தீயசக்தியோ, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், துக்கத்தைச் சுமக்க முடியாத பதற்றத்தில் கதறிக் கொண்டிருக்கிறது. இவர்களின் பதற்றத்தைப் பார்த்தால்… பரந்தூர் அடுத்த 2ஜியா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.

