மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு: 20-க்கும் அதிகமான கேள்விகளை முன்வைக்கும் காவல்துறை..!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தற்போது 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரியும், காவல்துறை பாதுகாப்புக் கேட்டும் த.வெ.க. சார்பில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்திடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவையடுத்து, த.வெ.க.வின் மதுரை மாநாடு தொடங்கும் நேரம், முடியும் நேரம், மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர் யார்? மாநாட்டு மேடையின் அளவு என்ன? என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மாநாடைப் போலவே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள காவல்துறை, மாநாட்டில் பங்கேற்கும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கையும் தர அறிவுறுத்தியிருக்கிறது.
அந்த வகையில், த.வெ.க. கட்சியிடம், 20க்கும் மேற்பட்ட கேள்விகளை முன்வைத்து விளக்கமளிக்கவும், உரிய விவரங்களைத் தரவும்ட மதுரை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழகத் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. ஒரு பக்கம் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி, மறுபக்கம் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம், தேமுதிக கட்சிகள் இதுவரை தனித்தனியே களமிறங்குமா, கூட்டணி அமைக்குமா என்று உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


